(எம்.மனோசித்ரா)
கிராம உத்தியோகத்தர் பிரிவுளை முடக்குவதும் , மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
எனவே எதிர்வரும் 14 நாட்களுக்கு தளர்வற்ற தொடர்ச்சியான ஊரடங்கினை அல்லது நாடளாவிய ரீதியிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ சங்கம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கம் என்பன இணைந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு 4 மருத்துவ சங்கங்களும் இணைந்து அரசாங்கத்தை கோருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது வைத்தியாலைகளில் கொவிட் தவிர்ந்த ஏனைய நோயாளர்களை அனுமதிக்க வேண்டிய பிரிவுகளில் கூட கொவிட் தொற்றாளர்களையே அனுமதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சிகிச்சை பெறும் தொற்றாளர்களில் பெறுமளவானோர் ஒட்சிசன் தேவையுடையவர்களாகவுள்ளனர். இதனால் நாட்டின் மருத்துவ கட்டமைப்பிற்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையை விட மும்மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். நாட்டில் பாரியளவில் தொற்று பரவியுள்ளது.
ஏனைய நாடுகளும் இதனை விட பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்தன. எனினும் கடுமையான தொடர்ச்சியான போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஊடாகவே அந்த நாடுகளால் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது.
அதனையே எமது நாடும் பின்பற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். எனவே குறைந்தது 14 நாட்களேனும் ஊரடங்கு சட்டம் அல்லது முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை முடக்குவதன் ஊடாகவும் , மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதன் ஊடாகவும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
எனவே இவ்வாறு கடுமையற்ற போக்குவரத்து கட்டுப்பாடுகள் பிரயோசனமற்றவையாகும். எனவே தான் 14 நாட்கள் தொடச்சியான ஊரடங்கு அல்லது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு , இடையில் ஒரு நாளேனும் அவை தளர்த்தப்படக் கூடாது என்று வலியுறுத்துகின்றோம்.
தற்போது தீர்மானித்துள்ளதைப் போன்று 3 நாட்கள் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து பின்னர் ஒரு நாள் அதளை தளர்த்தி மீண்டும் நடைமுறைப்படுத்துவது பொறுத்தமற்றது.
காரணம் இந்த ஒரு நாளிலும் கூட தொற்று பரவல் தீவிரமடையும். அதே போன்று தற்போது நடைமுறையிலுள்ள தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையும் , விற்பனை நிலையங்களில் 25 வீதமானோர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பதும் கூட தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்று நாம் எண்ணவில்லை.
மேலும் 14 நாட்கள் தொடர்ச்சியாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கூட அதன் பின்னரும் சாதாரணமாக நடமாடக் கூடிய சூழல் காணப்படாது. எனவே 14 நாட்களின் பின்னரும் வரையறைகளுடன் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM