(எம்.மனோசித்ரா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கும் குற்ற விசாரணைப் பிரிவு , புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கோரும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்திருந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இன்றி நடவவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வல் சில்வா ஆண்டகை ஆகியோரால் நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் எதிர்பார்க்கும் நீதி , நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டத்தை தொடர எதிர்பார்த்துள்ளோம்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் கத்தோலிக்க மக்கள் மீது மாத்திரமின்றி இலங்கையின் ஒட்டுமொத்த இனத்தவர்களுக்குமான பாரிய தாக்குதலாகும். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மறக்கக் கூடியதல்ல.
எனவே இதனை திட்டமிட்டு செயற்படுத்திய , இதற்கு பல வழிகளிலும் உதவிய எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதன் மூலம் நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது உரிய அதிகாரிகளின் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்றாமலிருக்கின்றமை குற்றச் செயல் என்பதே எமது நிலைப்பாடாகும்.
எனவே பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை வழங்க முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் அரசியல் தலையீடுகள் இடம்பெறக் கூடாது என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சியிடமும் பொறுப்பு வாய்ந்த சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
தாக்குதல்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களை துரிதமாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதோடு , இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசிமுடன் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் பல வழிகளில் கொடுக்கல் வாங்கல் செய்தவர்கள் மற்றும் தொடர்புகளை மேற்கொண்டவர்கள் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்திருந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இன்றி நடவவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் காணப்படும் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை முழுமையாக தடை செய்து , அவர்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு அனுசரணையாளர்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் உள்நாட்டவர்கள் ஆகியோரை இனங்கண்டு அவர்களை நாடு கடத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அத்தோடு குறிப்பிட்ட சிலரால் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பல வகையான ஆயுதங்களை கைப்பற்றும் அதே வேளை , தீவிரவாத செயற்பாட்டுக்கு ஊட்டமளித்த பணம் மற்றும் அசையும் , அசையா சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமையாக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எம்மால் மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அல்லது செயற்படுத்துவதற்குரிய நடைமுறைகளையேனும் முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நாட்டில் இடம்பெறுகின்ற வெவ்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் உள்ளிட்ட ஏனைய புலனாய்வு தகவல்களுடன் தொடர்புடைய அரச திணைக்களங்களினால் அவற்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் துரிதமாகக் கைது செய்யப்படுகின்றனர்.
இவ்வாறான நிலைமை காணப்படுகின்ற போதிலும் 269 பேரை கொலை செய்த , 300 க்கும் மேற்பட்டோரை அங்கவீனமுடையவர்களாகவும் வாழ் நாள் முழுவதும் மருத்துவம் பெறும் நிலைக்கும் இட்டுச் சென்றவர்களை கண்டு பிடிப்பதற்கும் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள போதிலும் முடியாமல் போயுள்ளமை ஆச்சரிமளிக்கிறது.
எனவே இவ்வாறான நிறுவனங்களின் செயற்திறனுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் உண்மையை வெளிப்படுத்தச் செய்வதை வலியுறுத்தி எம்மால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளிக்கப்பட்டால் மீண்டும் இதே போன்றதொரு தாக்குதல் இடம்பெறக் கூடிய அபாயமுள்ளது.
இந்த அபாயத்திலிருந்து நாட்டை மீட்படு அரசாங்கத்தின் பொறுப்பாகும். குறுகிய அரசியல் இலாபங்களை கருத்திற் கொள்ளாமல் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது எதிர்க்கட்சியின் பொறுப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM