வரலாற்றின் மற்றொரு அத்தியாயத்தை உணர்ந்து வியந்தேன் - இந்திய உயர்ஸ்தானிகர் 

Published By: Digital Desk 4

18 Mar, 2021 | 08:45 PM
image

(செ.தேன்மொழி)

அயோத்தி ராமர் கோவில் நிர்மாண பணிகளுக்காக இலங்கையின் சீதையம்மன் ஆலையத்திலிருந்து புனித சின்னம் இந்தியாவிற்கு வழங்கும் நிகழ்விற்காக எனக்கு அழைப்புவிடுக்கப்பட்ட போது, இருநாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவு வழிகள் உள்ளமையை உணர்ந்து வியந்தேன்.

இதனூடாக இரு தரப்பு நீண்டகால நல்லுறவுடனான வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் எழுதப்படுவதை காணக்கூடியதாக இருந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் முயற்சியின் ஊடாக இந்த புனித சின்னத்தை இந்தியாவிற்கு வழங்கும் நிகழ்விற்காக எனக்கு அழைப்புவிடுக்கப்பட்ட போது, இருநாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவு வழிகள் இருக்கின்றன என்று வியந்தேன்.

இராமாயணத்தின் பல்வேறு கூறுகள் மற்றும் பிரிவுகள் தொடர்பில் பி.பி.தேவராஜ் அவரது உரையின் போது குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவின் நீண்டகால நல்லுறவுடனான வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் எழுதப்படுவதை காணக்கூடியதாக இருந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

அதுமாத்திரமன்றி இதனூடாக இருநாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவிற்கும் புதிய அடித்தளமொன்று இடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு பின்னதாக இந்தியர்கள் பலர் சீதா-எலியவிற்கு வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

அதேவேளை அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் புதிய கோயிலைப் பார்வையிடுவதற்கு இலங்கையர்களும் இந்தியாவிற்குச் செல்வார்கள்.

எனவே இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தக்கூடிய இந்த முயற்சிக்காக முன்நின்று செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகூற விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன்

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் கூறியதாவது ,

இன்றைய தினம் ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெறுகின்றது. இலங்கையில் உள்ள புனித சின்னமொன்று அயோத்தியில் நிர்மானிக்கப்படும் ராமர் கோயிலுக்காக அனுப்பிவைக்கப்படும் நிகழ்வாகும். இந்த வைபவம் ஆடம்பரமற்ற முறையில்  நடைபெற்றாலும் கூட, இதன் பெருமை மிகவும் உயர்வானதாகும். எனவே இதற்கான முழு முயற்சிகளை எடுத்த தொழிலதிபர் முத்துக்கிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் மற்றும் ஆலயத்தின் அறக்காவலர் சுந்தரலிங்கம் ஆகியோருக்கு நன்றிகூற விரும்புகின்றேன்.

சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கோவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், நாங்கள் சீதா-எலிய கோவிலைப் மேம்படுத்திய போது  1908 ஆம் ஆண்டில் குறித்த புனிதக்கல் அங்கிருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.

அதனைத்தொடர்ந்து கோவிலின் அறங்காவலர்கள் இந்த புனித சின்னத்தை இந்தியாவிற்கு அனுப்பிவைப்பது குறித்துப் பேசியபோது, நாங்கள் அதனை ஸ்ரீ மயூராபதி ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கினோம். தற்போது அவர்கள் இந்த புனித சின்னத்தை அயோத்திக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறார்கள்.

அதேவேளை இராமாயண கதையின் ஊடாக தற்போது மாத்திரமன்றி வரலாற்று ரீதியாகவே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டமை உறுதியாகின்றது. சீதை இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்ததோடு, அனுமான் அவர் இருந்த இடத்தைக் கண்டறிந்ததுடன் இராமனும் இலங்கைக்கு வந்ததாக இராமாயணக்கதையில் கூறப்படுகின்றது. அனுமான் வந்ததாகக் கூறப்படும் சீதா-எலியவை அண்மித்த நிலப்பகுதியில் உள்ள மண் தற்போதும் கருநிறத்திலேயே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி தேவராஜ்

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி தேவராஜ் கூறுகையில்,

இந்தியாவின் பாரம்பரிய சிறப்பிற்குரிய விடயமாக இராமாயணம் காணப்படுகின்றது. இது இந்தியாவிற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும், மானிட சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, பாலி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றிலும் இராமாயணத்தின் வௌ;வேறு கூறுகள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உலகின் பல நாடுகளிலும் வருடாந்தம் இராமாயணம் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, வடஇந்தியாவில் வெகுவாகப் பேசப்படுவது வால்மீகி இராமாயணம் தொடர்பிலேயே ஆகும். அதுவே இராமாயணத்தின் மூலப்பிரதியாகும்.

அதேவேளை தென்னிந்தியாவில் கம்பராமாயணம் அதிகளவில் வாசிக்கப்படுகின்றது. ஆகையிலேயே மகாகவி பாரதியார் 'உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று பாடினார். அதேபோன்று 'காலமெனும் ஆழியிலும் காற்று, மழை, ஊழியிலும் அழியாது கம்பனவன் பாட்டு, அது தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு' என்று கண்ணதாசன் என்ற மற்றுமொரு கவிஞர் பாடினார். கம்பரால் எழுத்தப்பட்டவற்றை எக்காலத்திலும் எதனாலும் அழிக்கமுடியாது என்றே தமது கவிவரிகள் மூலம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இராமாயணத்தில் கோசல, கிஷ்கிந்தை மற்றும் இலங்கை ஆகிய மூன்று தேசங்கள் பற்றிப் பேசப்படுகின்றது. எனவே இந்தக் கதையுடன் இலங்கை மிகநெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் இந்நிகழ்வு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமையும் என்று நம்புகின்றேன் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38