ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை பரிந்துரைகள் ஏப்ரல் 21 க்கு முன்னர் நிறைவேற்றப்படும்

Published By: Digital Desk 3

16 Mar, 2021 | 10:12 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும்.

மத்ரஸா பாடசாலை மற்றும் புர்கா தடை,அடிப்படைவாதத்துக்கு எதிரான புதிய சட்டங்கள் உருவாக்கல், விசாரணை அறிக்கைகளை நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்ற கட்டமைப்பில் விசேட பொறிமுறையை ஏற்படுத்தல், அடிப்படைவாத செயற்பாடுகளை கண்காணிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவை நிறுவல் ஆகிய விடயங்கள் குறித்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி தொடர்புப்பட்ட தரப்பினருக்கு விசேட ஆலோசனை வழங்கியுள்ளார் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறந்த பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் எதிர்காலத்தில் தலைத்தூக்காத அளவிற்கு பல விடயங்களை செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. ஆணைக்குழுவின் அறிக்கையின் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பரிந்துரைகளை வெகுவிரைவில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி தொடர்புப்பட்ட தரப்பினருக்கும், நிறுவனங்களுக்கும் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அடிப்படைவாதிகளின் பின்னணி கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருக்காது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சுயாதீனமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மக்கள் நியாயம் கோரி ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் கறுப்பு ஞாயிறு தின போராட்டத்தில் ஈடுப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை பாதுகாக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அறிக்கையின் யோசனைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் 35 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில்கைது செய்யப்பட்ட 36 பேருக்கு எதிரான  வழக்கு விசாரணைகள் நிறைவுப் பெற்றுள்ளன. விசாரணை தொடர்பிலான ஆவணங்களை சட்டமாதிபருக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கும்,குற்றப்புலனாய்வு பிரிவினருக்கும் விசேட பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு துருக்கி நாட்டில் இயங்கும் பெடோ நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் யோசனைக்கு அமைய பின்வரும்  விடயங்களை துரிதமாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புர்கா தடை

இஸ்லாமிய  அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எதிர்காலத்தில்  தீவிரவாதம், அடிப்படைவாத செயற்பாடுகள் தலைத்தூக்காமலிருக்க வேண்டுமாயின் புர்கா தடை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புர்கா ஆடை மீதான தடையினை சட்டவிரோத செயற்பாடு என கருத முடியாது தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இத்தீர்மானத்தை கட்டாயம் செயற்படுத்த  வேண்டும்.

பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு புர்கா ஆடைக்கு தடை விதித்துள்ளது.இதற்கமைய இலங்கையிலும் பொது இடங்களில் புர்கா ஆடையை அணிவதற்கு நிரந்தர தடை விதிக்கும் சட்டம் பாராளுமன்றில் உருவாக்கப்படும்.

மத்ரஸா பாடசாலை

மாணவர்களின் மத்தியில் அடிப்படைவாதத்தையும், பிற இனத்தவர்கள் மீதான வெறுப்புணர்வினையும் மத்ரஸா பாடசாலைகள் தூண்டி விடுகின்றன என்று அறிக்கையில் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை ஒரு சாதாரண விடயமாக கருத முடியாது. அனைத்து இன பிள்ளைகளும் 16 வயது வரை  கல்வி அமைச்சின் நெறிப்படுத்தலுக்கு அமைய கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அடிப்படைவாத செயற்பாடுகளை கொண்டு செயற்படும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்ய வேண்டும் என  சுட்டிகக்காட்டப்பட்டுள்ளது. இது கல்வி அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 1965 மத்ரஸா பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் கற்பிக்கப்படும் கற்கை நெறிகள் குறித்து  விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.அடிப்படைவாத நோக்குடன் செயற்பட்டுள்ள மத்ரஸா பாடசாலைகள் நிபந்தனைகளற்ற வகையில் தடை செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளும் கடுமையான அளவிற்கு முன்னெடுக்கப்படும்.

தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தும் புதிய சட்டங்கள்

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை பாராளுமன்றமட்டத்தில் முன்னெடுக்க சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடிப்படைவாதத செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிக்க தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் வலுவானதாக அமையாது என ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசேடமான சுட்டிக்காட்டியுள்ளது

குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் 5 நாடுகளில் வசித்த54 இலங்கையர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இவர்களில் 50 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். மிகுதி நால்வரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை நாடு கடத்தல் சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது. தற்போது அமுலில் உள்ளநாடு கட்டத்தல் சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுகளில் இருந்து தனியார் மற்றும் நிறுவனங்களுக்கு  அனுப்பப்படும் நிதி தொடர்பில் ஆராய  விசேட பிரிவை உருவாக்க பிரத்தியேக சட்டம் உருவாக்கப்பட வேண்டும். தற்போது அமுலில் உள்ள கறுப்பு பணம் சுத்திகரிப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் தனிநபர்  பிரேரரணகள் குறித்து பாராளுமன்றில் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய புலனாய்வு தகவல் நிறுவனத்தை பாராளுமன்ற சட்டத்தினால் பலப்படுத்தவும் தீர்மானிக்ப்பட்டுள்ளது.

விசேட நீதிமன்றம்

அடிப்படைவாதம், தீவிரவாதம் தொடர்பிலான வழக்குகளை நீதிமன்றில் விசேடமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள விசேட பொறிமுறை வகுக்கப்படும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம் உருவாக்கப்படும். இந்நீதிமன்றில் நாளாந்தம் வழக்கு விசாரணை செய்யப்படும்.

அடிப்படைவாதம் தொடர்பில் ஆராய பொலிஸ் நிலையத்தில் விசேட பிரிவு

ஏப்ரல் 21குண்டுத்தாக்குத்ல் சம்பவத்துடன் நாட்டில் புரையோடி போயுள்ள  அடிப்படைவாதம் முடிவடையவில்லை அடிப்படைவாதம் பல்வேறு வழிமுறைகளில் வியாபித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆகவே நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும்  அடிப்படைவாதம், தீவிரவாதம் தொடர்பில் கண்காணிக்க விசேட கண்காணிப்பு பிரிவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை  முழுமையாக பகிரங்கப்படுத்த முடியாது. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பல விடயங்களின் இரகசிய தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமாதிபருக்கு அறிக்கை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் பல விடயங்கள் முழுமையாக செயற்படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14