மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட்டம் 

Published By: Digital Desk 4

14 Mar, 2021 | 09:26 PM
image

கல்முனை பெரிய நீலாவணையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மோட்டர்சைக்கிள் ஒன்றை இருவர் திருடிக்கொண்டு அதே மோட்டர் சைக்கிளில்  மட்டக்களப்பு புளியந்தீவு  லில்லி வீதியில்  குப்பைகளை வீதிக்கு கொண்டுவந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு  திருடிய மோட்டர்சைக்கிளை அம்பாறையில் விட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம்  நேற்று சனிக்கிழமை (13) காலையில் இடம்பெற்றுள்ளாதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர் வலயக்கல்வி பணிமைக்கு அருகிலுள்ள லில்லி வீதியில் சம்பவதினமான நேற்று காலை 10.30 மணியளவில் பெண் ஒருவர் வீட்டின் குப்பைகளுடன் வீதிக்கு வந்தபோது பின்னால் மோட்டர்சைக்கிளில் வந்த இருவர் திடிரென பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை இழுத்து அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிசார் வீதியில் பொருத்தப்பட்ட சி.சி.ரி.வி கமராவின் காணொளி பதிவுகளை வைத்து மேற்கொண்ட விசாரணையில் குறித்த மோட்டர்சைக்கிள் கல்முனை பெரியநீலாவணை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது எனவும் அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு மோட்டர்சைக்கிளில் சகோதரியின் வீட்டிற்கு சென்று   மோட்டர்சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்று வெளியே வந்தபோது மோட்டர்சைக்கிள் திருட்டுபோயுள்ளதாக 8.30 மணிக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அம்பாறை நகர் பகுதியில் நேற்று மாலை வீதியில்  கொள்ளையர்கள் கல்முணை பெரிய நீலாவணையில்  திருடிய மோட்டர்சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்