(செ.தேன்மொழி)
அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஆளும் தரப்பினர்கள் தொடர்பில் விபரங்களை அறிந்துக் கொள்வதற்காக அமைச்சர் விமல் வீரவன்சவிடம் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இதுதொடர்பான முறைப்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அளித்திருந்ததுடன், இவருடன் சட்டதரணிகளான எரந்த வெலியங்க மற்றும் தாரக்க நாணயக்கார ஆகியோரும் சென்றிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காவிந்த ஜயவர்தன கூறியதாவது, தற்போதைய அரசாங்கத்தில் அடிப்படைவாதிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ள சிலர் இருப்பதாகவும், அவர்களின் தலையீட்டின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உரிய தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்கமாக தெரிவித்திருந்ததுடன், அந்த கருத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. அதனால் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவிப்பதற்காக இன்றைய தினம் நாங்கள் வந்துள்ளோம்.
உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குவதாகவும், அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாகவும் வாக்குறுதி வழங்கியே அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் இன்று அந்த வாக்குறுதியை புறக்கணித்து செயற்படுவதாக தோன்றுகின்றது. இதனால் கத்தோலிக்க மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் சில பகுதிகளில் சட்டமா அதிபருக்கு கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறு இருக்கையில் அவரால் எவ்வாறு இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கமுடியும். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு சட்டமா அதிபர் பொறுப்பளித்துள்ளார்.
சட்டதரணி எரந்த வெலியங்க கூறியதாவது, உயிர்த்த ஞாயிறுதின சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், இந்த தாக்குதலை திட்டமிட்ட நபர் தொடர்பில் எவ்வித தகவலும் உள்ளடங்கப்படவில்லை. இதேவேளை தாக்குதல் தொடர்பில் நினைவுகூறும் போது எமக்கு பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் பெயரே நினைவில் வரும். ஆனால் இவர் தாக்குதலுடன் நேரடியான தொடர்பினைக் கொண்டுள்ளவர். இவரையும் வழி நடத்திய நபர் இருப்பார். அவர் தொடர்பில் விபரங்களை அறிந்துக் கொள்ள வேண்டும். அப்போதே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை எம்மால் பெற்றுக் கொடுக்க முடியும்.
இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்தின்படி, அடிப்படைவாதிகளை பாதுகாத்து வரும் ஆளும் தரப்பினர்களின் தலையீட்டின் காரணமாகவே, இந்த அடிப்படைவாதிகள் தொடர்பான விபரங்களும் மறைக்கப்பட்டு வருவதாக தோன்றுகின்றது. அதனால் விமல்வீரவன்சவை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்து விசாரகைளை நடத்தி, இந்த அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் விபரங்களை அறிந்துக்கொள்ள வேண்டும். அந்த உறுப்பினர்கள் யார் என்று அறிந்துக் கொண்டதின் பின்னர் அவர்களிடமிருந்து, உயிர்த்த ஞாயிறுதின சம்பவத்தின் பிரதான சூஸ்திரதாரி யார் என்பதையும் அறிந்துக்கொள்ள முடியும்.
விமல் வீரவன்ச என்பவர் அரசாங்கத்தின் வெற்றிக்காக உழைத்தவர் என்பதுடன், அவர் அமைச்சராகவும் செயற்பட்டு வருகின்றார். அதனால் அவருடைய கருத்தை வெறுமனே கருத்தாக எண்ணமுடியாது. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது பொலிஸாருக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகளுக்கு அரசியல் ரீதியிலான தலையீடுகள் ஏற்படாது என்று எண்ணுக்கின்றோம். அவ்வாறு ஏதேனும் தலையீடு ஏற்பட்டால், சட்டதரணிகள் என்ற வகையிலும் , இந்நாட்டு பிரஜைகள் என்ற வகையிலும் அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM