(செ.தேன்மொழி)
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை , எதிர்வரும் அமர்வின் போது பாராளுமன்றத்தில் சமர்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாட்டுக்கு மிக முக்கியமானது என்று காண்பிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை தொடர்ந்தும் மறைத்து வைத்திருப்பதற்கான காரணம் என்னவென்று கேள்வியெழுப்பிய அவர் , இதனூடாக நாட்டின் ஜனநாயக கோட்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் ஏற்பட்டால் அவற்றுக்கு எதிராக செயற்படுவதற்காக அனைவரையும் தங்களுடன் இணைந்துக் கொள்ளுமாறு அழைப்பும் விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு அழைப்பு விடுத்த அவர் மேலும் கூறியதாவது ,
அரசாங்கம் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுக்கு எதிராக பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிக்கும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக அடக்குமுறை செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
இந்நிலையில் , அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் , அது இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்குமாறு நாம் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர் அது இன்னமும் தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த மாதம் 15 ஆம் திகதியே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேலும் ஆராய்ந்து பார்ப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விசேட ஆணைக்குழுவொன்றையும் நியமித்துள்ளார்.
இந்நிலையில் முதலாவது அறிக்கையை சமர்பிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? , இந்த விசாரணை அறிக்கையானது மிகவும் முக்கியமானது என்றே நாட்டுக்கு காண்பித்து வந்தனர்.
தற்போது அதனை மறைத்து வைத்திருப்பதற்கான தேவை என்ன ? அதனால் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்.
இதேவேளை அடுத்தக்கட்ட அமர்வுகளின் போது அறிக்கை தொடர்பான விவாதங்களை நடத்த வேண்டும்.
நாட்டில் சுயாதீனமான நீதித்துறை காணப்படுகின்றது. அதற்கமைய நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீரப்ப்புகளை அரசியல் ரீதியான ஆணைக்குழு ஒன்று மாற்றியமைக்க முயற்சிக்க கூடாது.
அத்தகைய முயற்சிகள் காணப்படுகின்றதா? என்றும் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் ஜனநாயக கோட்பாடுகளுக்கு முரணான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று நாம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.
எதிர்கட்சியின் செயற்பாடுகளை கண்டு பயத்தில் பொருத்தமின்றி செயற்படுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனினும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாம் ஏனைய எதிர்கட்சிகளுடனும் கலந்துரையாடினோம். எமது இந்த கலந்துரையாடலை சிலர் திரிவுப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தனர். அதனை நிவர்த்தி செய்துக் கொள்ளுமாறு இந்த சந்தர்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாட்டின் ஜனநாயக கோட்பாடுகளுக்கு முரணான வகையில் அரசாங்கம் செயற்பட முயற்சித்தால் பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்றவகையில் நாம் அதனை விமர்சிப்பதுடன் , அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இந்நிலையில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கமைய எமது ஜனாநாயக உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவiயும் எம்முடன் இணைந்து செயற்படுமாறு அழைப்புவிடுக்கின்றோம்.
கேள்வி : நீங்கள் கூறுவதைப் போன்று ஆணைக்குழுவின் அறிக்கையில் பாரதூரமான எந்த விடயமும் உள்வாங்கப்படாமல் இருந்தால்?
பதில்: அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எமக்கு உறுதியாக கூற முடியாது. எமக்கு கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையிலேயே நாம் பேசுகின்றோம்.
ஆனால் கடந்த காலங்களில் இந்த அறிக்கையானது நாட்டுக்கு மிகவும் அவசியமானது என்ற வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்பட்டது. இந்நிலையில் அதனை தொடர்ந்தும் மறைத்து வைக்க வேண்டிய தேவையில்லை என்பதையே நாம் கூறுகின்றோம்.
கேள்வி : அறிக்கை தொடர்பில் உங்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதா?
பதில் : எமக்கு எவ்வித அச்சமும் இல்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதே எமது பிரதான நோக்கமாகும். அதற்காகவே நாம் பேசுகின்றோம். இந்நிலையில் , அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM