(ஆர்.யசி)
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கக்கோரி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதான எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதுடன் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீது இரண்டு நாட்கள் விவாதமும் கேட்டுள்ளனர்.
எனினும் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என சந்திப்பில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையில், பாராளுமன்ற விவாதங்களை தீர்மானிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டம் நேற்றுக் காலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதானது,தொழில் அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நாளை 10ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணி முதல் 10.30 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பிரதமர் பதில் வழங்குவார்.
அதன் பின்னர் முற்பகல் 10.30 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விநேரம் வழங்கப்படும்.
அன்றையதினம் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதுடன், இவ்விவாதம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெறும்.
அதன் பின்னர் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரரணை மீதான விவாதம் இடம்பெறும்.
பெப்ரவரி 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பததுடன் , அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அத்துடன், பெப்ரவரி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுரங்கனி எல்லாவல, கௌரவ கே.பி.சில்வா மற்றும் கௌரவ கபில அபேரத்ன ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறும், ஆணைக்குழுவின் அறிக்கை மீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்த சபை இணங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையையும் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் சபைப்படுத்துவது குறித்து ஆளும் கட்சி எந்தவித தெளிவான பதிலையும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கவில்லை.
அதேபோல் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் அரசாங்கம் இணங்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM